தமிழக அரசால் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட மசோதாவிற்கு இந்திய ஜனாதிபதி அவர்களால் கடந்த 06.08.2022ம் தேதி அன்று இசைவு வழங்கப்பட்டு கடந்த 16.08.2002ம் தேதி அன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.
*கொண்டுவரப்பட்ட ஐந்து திருத்தங்கள்:*
1. *புதிய பிரிவு 22-B* - *போலி ஆவணங்கள் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட பிற ஆவணங்களை பதிவிற்கு மறுத்தல்*
இதன்படி கீழ்கண்ட ஆவணங்கள் பதிவு செய்வதற்கு பதிவு அலுவலர் மறுக்க வேண்டும்.
i) போலியாவணங்கள். அதாவது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 470ல் வரையறுக்கப்பட்டுள்ள அதே அர்த்தம் கொண்டுள்ள ஆவணங்கள்.
ii) மத்திய அல்லது மாநில அரசால் பரிமாற்றத்திற்கு தடை செய்யப்பட்டு, அந்த தடை செயல்படுத்தும் நிலையில் உள்ள காலம் வரையில், அந்த தடை சம்பந்தப்பட்ட பரிமாற்ற ஆவணங்கள்.
iii) எந்த ஒரு நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தினாலோ, மாநில அல்லது மத்திய அரசு சட்டத்தினால் உருவாக்கப்பட்ட அதிகார அமைப்பு அது செயல்படும் நிலையில் உள்ள காலத்திற்குள்ளாக அந்த அதிகார அமைப்பினாலோ, தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக, ஜப்தி /பற்றுகை செய்யப்பட்ட அசையா சொத்துக்களை விற்பனை, தானம், குத்தகை அல்லது வேறு வகையில் பரிமாற்றம் செய்யும் ஆவணங்கள்.
iv) மாநில அரசால் அறிவிப்பு மூலம் குறிப்பிடப்பட்ட எந்த ஒரு ஆவணமும்.
2. *புதிய பிரிவு 77-A* - *சில நேர்வுகளில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்தல்*
(1)பதிவாளர், தானாகவோ அல்லது ஏதாவது ஒரு நபரிடமிருந்து பெறும் புகாரின் அடிப்படையிலோ, ஏற்கனவே உள்ள பிரிவு 22ஏ (அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளை பதிவதற்கு தடை செய்யும் பிரிவு) மற்றும் பிரிவு 22 பி (மேற்சொன்ன புதிய பிரிவு) ஆகிய பிரிவுகளில் சொல்லப்பட்டிருப்பதை மீறி பதியப்பட்டுள்ளது என்று கருதும்பட்சத்தில் 'ஆவணத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது' என்று விளக்கம் கேட்டு எழுதிக் கொடுத்தவருக்கும், ஆவணம் சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிக்காரர்களுக்கும் மற்றும் தொடர்ந்து ஆவணங்கள் இருப்பின் அதன் கட்சிக்காரர்களுக்கும் மற்றும் அந்த ஆவணத்தை ரத்து செய்வதால் பாதிக்கப்படுபவர்கள் என்று பதிவாளர் கருதும் நபர்கள் அனைவருக்கும் அறிவிப்பு அனுப்ப வேண்டும். பதில் ஏதும் வந்திருப்பின் அதனை சீர்தூக்கி பார்த்து பதிவாளர் அந்த ஆவணத்தை ரத்து செய்யலாம் மற்றும் அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட புத்தகங்களிலும் அட்டவணைகளிலும் உட்பகுத்த வேண்டும்.
(2)ஆவணத்தை ரத்து செய்யும் இந்த அதிகாரத்தை பதிவுத்துறை தலைவர் அவர்களும் உபயோகிக்கலாம்.
3. *புதிய பிரிவு 77-B* - *மேல்முறையீடு*
(1) பிரிவு 77-A(1)ன் படி பதிவாளரின் உத்தரவினால் இடருற்ற எந்த ஒரு நபரும் ஆவணம் ரத்து செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு மேல்முறையீடு செய்து விண்ணப்பிக்கலாம். பதிவாளரின் உத்தரவினை உறுதி செய்தோ, திருத்தம் செய்தோ அல்லது ரத்து செய்தோ பதிவுத்துறை தலைவர் அவர்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
(2) பிரிவு 77-A(2)ன் படி பதிவுத்துறை தலைவர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், மேல்முறையீட்டினை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள்ளாக அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
4. *புதிய பிரிவு 81-A* - *பிரிவுகள் 22ஏ மற்றும் பிரிவு 22பி இவற்றை மீறி ஆவணங்களை பதிவு செய்வதற்கான தண்டனை*
(1)இந்தச் சட்டத்தின் கீழ் பதிவதற்காக தாக்கல் செய்யப்படும் ஆவணங்களை பதிவதற்காக வேண்டி பொறுப்புடைய நபரான, இந்த சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட அனைத்து பதிவு அலுவலர்களும் மற்றும் அவரால் இந்தச் சட்டத்தின் காரணங்களுக்காக வேலையில் அமர்த்தப்பட்ட எந்த ஒரு நபரும் பிரிவு 22ஏ மற்றும் பிரிவு 22 பி ஆகியவற்றில் கூறியுள்ளவற்றிற்கு மாறாக ஆவணங்கள் பதிவு செய்திருந்தால், *மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்*.
(2)நல்லெண்ணத்தின் காரணமாக பதியப்படும் ஆவணத்திற்கு இந்த பிரிவில் கூறப்பட்டுள்ளவைகள் பொருந்தாது.
*விளக்கம்:
"நல்லெண்ணம்"* என்ற சொல்லின் பொருளானது, ஒரு நபரால் நல்ல எண்ணத்தில் தகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் மற்றும் பொறுப்புணர்ச்சிடனோ அல்லது உண்மையை தவறாக புரிந்து கொண்டதால் இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 79 இன் கீழ் 'சட்டத்தால் நியாயப்படுத்தக் கூடியது' என்று தன்னைத்தானே நம்பிக் கொண்டோ நம்பப்பட்ட அல்லது செய்யப்பட்ட எந்தவொரு செயல் ஆகும்.
5. *புதிய பிரிவு 81-B* - *நிறுவனத்தால் செய்யப்படும் குற்றங்கள்*
(1)இந்த சட்டத்தினால் குற்றம் என்று சொல்லப்பட்டது ஒரு நிறுவனத்தால் செய்யப்பட்டிருக்குமாயின், அந்த குற்றம் செய்யப்பட்ட நேரத்தில் அந்த நிறுவனத்திற்கு பணிப்பொறுப்பில் இருந்த, பொறுப்புடையவர்களான ஒவ்வொரு நபர்களும் மற்றும் அந்த நிறுவனமும் குற்றம் புரிந்தவர்களாக கருதப்பட்டு, தொடர்ந்து எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏற்றவாறு தண்டிக்கப்படக்கூடிய வகையில் பொறுப்புடையவர்களாக்கப்படுவர்.
*நிபந்தனையாக*, இந்த உட்பிரிவில் கூறப்பட்ட எதுவும் ஒரு நபரை குற்றத்திற்கு பொறுப்புடையவராக்காது, அது எப்போதென்றால் அந்த நபர் குற்றம் நடைபெற்ற உண்மை தனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது என்றோ அல்லது அவர் அந்த குற்றம் நடைபெறாமல் தடுக்க அனைத்து தகுந்த முயற்சியை கையாண்டுள்ளார் என்றோ நிரூபித்திருத்தல் வேண்டும்.
(2) இந்த உட்பிரிவு 1ல் எவ்வாறு கூறப்பட்டிருப்பினும், இந்த சட்டத்தினால் குற்றம் என்று சொல்லப்பட்டது ஒரு நிறுவனத்தால் செய்யப்பட்டு, அந்த குற்றம் எந்தவொரு இயக்குநர், செயலாளர், நிர்வாகி அல்லது பிற அதிகாரியின் சம்மதத்துடன் அல்லது கண்டும் காணாதிருத்தலினால் அல்லது அவர்களின் அலட்சியத்தின் காரணமாக செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்ட நிலையில் அந்த இயக்குநர், செயலாளர், நிர்வாகி அல்லது பிற அதிகாரி குற்றம் புரிந்தவராக கருதப்பட்டு, தொடர்ந்து எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏற்றவாறு தண்டிக்கப்படக்கூடிய வகையில் பொறுப்புடையவர்களாக்கப்படுவர்.
*விளக்கம்:* இந்த பிரிவின் நோக்கத்திற்காக,
(a) நிறுவனம் என்பது ஒரு நிறுவனம் அல்லது பிற தனிநபர்களின் கூடுதல் இவற்றை உள்ளடக்கிய கூட்டுருக் குழுமம் ஆகும்.
(b) நிறுவனத்தின் இயக்குநர் என்பது ஒரு நிறுவனத்தைப் பொறுத்தவரையில் அந்த நிறுவனத்தின் தொழில் கூட்டாளி ஆவார்.
--------------முற்றும்--------------------