-->
Breaking News
Loading...

மாலை மாற்றுப் பதிகம்

திருஞானசம்பந்தர் பாடல்களில் மாலை மாற்றுப் பதிகம் என்பது தொடர்பாக இணையத்தில் படித்த ஒரு அற்புத பதிவு!
(பகிர்வு)
ஆங்கிலத்தில் palindrome என்றும், தமிழில் இருவழி ஒக்கும் சொல் என்றும் குறிப்பிடக் கூடிய ஒரு வார்த்தையாகும்.
MALAYALAM - இது ஆங்கிலத்தில் இடது புறத்திலிருந்து வலப்புறமாக படித்தாலும், வலது புறத்திலிருந்து இடது புறமாக படித்தாலும் ஒரே மாதிரியாக, அதே சொல்லாக அமையக்கூடியது.
ஆங்கிலத்தில் palindrome வார்த்தைகள் அதிகம் உள்ளது.
I PREFER PI
MADAM I'M ADAM

NEVER ODD OR EVEN என்பவை சில பிரபலமான பாலிண்டிரோம் வார்த்தைகள்
இவை போல ஆயிரக்கணக்கான எழுத்துக்களைக் கொண்ட பாலிண்டிரோம்கள் ஆங்கிலத்தில் உள்ளன.
palindrome என்பது இவ்வகை.தமிழில் - விகடகவி - இடதிலிருந்து வலமாக, வலமிருந்து இடமாக படித்தாலும் ஒரே சொல் அமையக் கூடியது.
தமிழில் பாலிண்டிரோம்கள் மிகக் குறைவே. ஒற்றெழுத்துக்கள் எனக் கூடிய புள்ளி வைத்த எழுத்துக்கள் தமிழில் பாலிண்டிரோம்கள் எழுதச் சற்றே தடையாக உள்ளன.
தமிழ் வார்த்தை: விகடகவி -
இடதிலிருந்து வலமாக, வலமிருந்து இடமாக படித்தாலும் ஒரே சொல் அமையக் கூடியது.
தாத்தா
பாப்பா
தேரு வருதே
மோரு போருமோ
"பூவாளை நாறு நீ பூமேக லோகமே பூ நீறு நாளை வா பூ"-
தண்டியலங்காரக் குறள் வெண்பா .
ஒரு வாக்கியம் இவ்வாறு அமைவது அதிசயமாகப் பார்க்கப்படும் நிலையில் ஒரு பாடலை அவ்வாறு அமைப்பது இன்னும் சிரமமான விஷயம்.
திருஞானசம்பந்தரோ தமிழின் மிக நீளமான பாலிண்டிரோமை அக்காலத்திலேயே ஒரு பாடல் மட்டுமல்லாமல் பதினோரு பாடல்கள் கொண்டதொரு திருப்பதிகத்தையே அழகுற அமைத்திருக்கின்றார்.
திருஞானசம்பந்தர் பாடல்களில் "மாலை மாற்றுப் பதிகம்"என்பது முழுக்க முழுக்க தமிழ் பாலிண்டிரோம்தான்.
மேலும் இந்த மாலை மாற்று பதிக  பாடல்களில் ஒற்றெழுத்து எனும் புள்ளி வைத்த எழுத்துக்கள் வராமல் பதிகத்தை பாடியுள்ளார் என்பதை இங்கே குறிப்பிடட்டாக வேண்டும்.
மாலை மாற்று பதிக பாடல்களை தலைகீழாகப் படிக்கவும் முடியும் என்பதோடு பொருளும்,பண்ணும் சிறந்து விளங்கும்படி இந்த பதிகத்தை 11பாடல்கள்களாக
அருளியுள்ளார் சம்பந்தர் .
சரி, மாலைமாற்று என்றால் என்ன?
"ஒரு செய்யுள் முதல், ஈறு உரைக்கினும், அஃதாய் வருவதை மாலை மாற்றென மொழி"
ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டி வாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்கு வரவேண்டும். இதுவே மாலைமாற்று எனப்படும்.
ஒரு மாலையில் மணிகளைக் கோர்த்த பின்னர் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் அந்த மாலை ஒரே மாதிரி இருக்குமல்லவா?
அதுபோல இந்தப் பாடலை முதல் எழுத்திலிருந்து வலப் புறமாகவோ, கடைசி எழுத்தில் தொடங்கி இடப் புறமாகவோ படித்தால் ஒரேமாதிரி இருக்கும்.
திருமாலைமாற்று" எனப்படும் இந்த திருப்பதிகம் பாடுவதற்கு மிகவும் கடினமானதாகக் கருதப்படுகிறது.
திருஞானசம்பந்தர் இயற்றியவற்றில் மாலைமாற்று அமைப்பில் மாலைமாற்றுத் திருப்பதிகம் எனப்படும் ஒரே ஒரு பதிகம் தான் கிடைத்திருக்கிறது.
சிறந்த பொருள் பொதிந்த  இத்திருப்பதிகத்தை பாடுவதற்கான பலனை இறுதியில் கூறியுள்ளார்.
திருஞான சம்பந்தர் இயற்றிய மாலை மாற்று (PALINDROME) பதிகத்தின் 11 பாடல்களும் அவற்றின் பொருள் விளக்கமும் கீழே!
திருமாலைமாற்று திருப்பதிகம் - சீர்காழி.
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பிரமபுரீஸ்வரர், ஸ்ரீ தோணியப்பர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ திருநிலை நாயகி, ஸ்ரீ பெரிய நாயகி
திருமுறை : மூன்றாம் திருமுறை 117 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. (01)
பாடல் விளக்கம்‬:
ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள் காணா வண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான திருமாலாகவும் வருபவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!.
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா (02)
பாடல் விளக்கம்‬:
வேள்வி வடிவினனே. யாழ் வாசிப்பவனே. அடியார்கட்கு அருள வரும்பொழுது உருவத்திருமேனி கொள்பவனே. மகா சங்கார கருத்தாவே. அனைத்துயிர்க்கும் தாயானவனே. ஆத்திப்பூ மாலை அணிந்துள்ளவனே. தாருகாவனத்து முனிபத்தினிகளாகிய மகளிர் கூட்டத்தை வேட்கையுறும்படி செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. துன்பங்கள் எவற்றினின்றும் எம்மைக் காப்பாயாக.
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா (03)
பாடல் விளக்கம்‬:
அழியாத மூப்பிலாத தசகாரியத்தால் அடையும் பொருளாக உள்ளவனே. சீகாழி என்னும் திருத்தலத்து முதல்வனே. எல்லோரும் அஞ்சி நீங்குகின்ற சுடுகாட்டில் நள்ளிரவில் நடனமாடும் நாதனே. மாண்புமிக்கவனே. ஐராவணம் என்னும் யானையின் மேல் ஏறி வருபவனே. கொடையில் கடல் போன்றவனே. சாவினின்றும் எங்களைக் காத்தருள்வாயாக. ஒளியுடைய மாணிக்கம் போன்றவனே. வேண்டும் வரங்களைத் தந்தருள்வாயாக. எங்கள்முன் எழுந்தருள் வாயாக. முன்னைப் பழம்பொருளே. காற்று முதலான ஐம்பூதங்களின் வடிவானவனே!
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ (04)
பாடல் விளக்கம்‬:
என்றும் மாறுதலில்லாத மெய்ப்பொருளானவனே. தாங்கிய வீணையை உடையவனே. கொடிய பிறவித் துன்பம் எங்களை அடையாவண்ணம் வந்து காத்தருள்வாயாக. விண்ணிலுள்ள தேவர்கள் துன்பம் அடையாதவாறு மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை அழித்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே, ஆகாய சொரூபியே! நீ விரைந்து வருவாயாக! அருள் புரிவாயாக.
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா (05)
பாடல் விளக்கம்‬:
யாவற்றுக்கும் கால கர்த்தாவாக விளங்குபவனே. எப்பொருளிலும் எள்ளில் எண்ணெய் போன்று உள்ளும், புறம்பும் ஒத்து நிறைந்திருப்பவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! அறிவில் மேம்பாடு உடையவனே! அனைத் துயிர்கட்கும் தாயாகவும், உயிராகவும் உள்ளவனே! என்றும் அழிவில்லாதவனே! இன்குரல் எழுப்பும் கின்னரம் முதலிய பறவைகள் தன்னருகின் வந்து விழும்படி வீணைவாசிப்பவனே. யாங்கள் மேற்கொண்டு ஆவனவற்றிற்கு ஆராயாதவாறு எங்களைக் காத்தருள் வாயாக!.
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே (06)
பாடல் விளக்கம்‬:
மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைக் கடுங்குரலால் கண்டித்தவரே. உம் திருவடியால் அவனை உதைத்து அக்காலனுக்குக் காலன் ஆகியவரே. பொருந்திய சனகர் முதலிய நால்வர்க்கும் சிவகுருவாகிக் கல்லால மரத்தின் கீழ் உபதேசித்து மெய்யுணர்வு பெறச் செய்தவரே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பரம்பொருளே. மேகத்தை வாகனமாகக் கொண்டருளியவரே. அடியேங்கள் உம் திருக்கூட்டத்தில் ஒருவர் போல் ஆவோம்.
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ (07)
பாடல் விளக்கம்‬:
உன்னைவிட்டு நீங்குதலில்லாத உமாதேவியை உடையவனே! ஒப்பற்ற தாயானவனே! ஏழிசை வடிவானவனே! நீயே வலிய எழுந்தருளி எங்களைக் காத்தருள்வாயாக! பேரன்பு வாய்ந்த நெஞ்சத்தை இடமாக உடையவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், வேதங்களை அருளிச்செய்து வேதங்களின் உட்பொருளாக விளங்குபவனே. எங்களைக் கொல்லவரும் துன்பங்களை நீ கொன்று அருள்செய்யாயோ?
நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே (08)
பாடல் விளக்கம்‬:
இறைவரின் திருவடிகளில் பேரன்பு செலுத்தும் அடியவராம் பசுக்கள் தன்வயமற்றுக் கிடக்க, கட்டிய ஆசை என்று சொல்லப்படும் பெருங்கயிற்றைத் தண்ணளியால் அவிழ்த்தருள்பவரே. மிக வேகமாக ஓடும் மானின் தோலை அணிந்துள்ள பேரழகு வாய்ந்தவரே. பொறுக்கலாகாத் தீவினைத் துன்பங்கள் தாக்க வரும்போது காத்தருள்வீராக! மன்னித்தற்கரிய குற்றங்கள் எங்களின் சிறுமைத் தன்மையால் செய்தனவாகலின் அவற்றைப் பெரியவாகக் கொள்ளாது சிறியவாகக் கொண்டு பொறுத்தருள்வீராக! ஏழிசைவல்ல இராவணன் செருக்கினால் செய்த பெரும்பிழையைத் தேவரீர் மன்னித்து அருளினீர் அல்லவா? (அடியேம் சிறுமையால் செய்த பிழையையும் மன்னித்தருளும் என்பது குறிப்பு).
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா (09)
பாடல் விளக்கம்‬:
காற்றாகி எங்கும் கலந்தருள்பவனே. மறைப் பாற்றலின் வழி எவ்வுயிர்க்கும் மயக்கம் செய்து பின் அருள் புரிபவனே. பூக்களில் சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், முறையே திருமுடியையும், திருவடியையும் காணுதலை ஒழித்த வைரத் தன்மையுடையவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. எங்களைக் கடைக்கணித்தருள்வாயாக. உன் திருவடியைத் தந்தருளுவாயாக!.
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே (10)
பாடல் விளக்கம்‬:
நறுமணமும், தெய்விக மணமும், பெருமையும், புதுமையும் கலந்து விளங்கும் சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! துன்பங்களை நீக்கி அருள்பவனே. பேரருள் உடையவனே. அதனை அள்ளிக்கொள்ளல் அகத்தவத்தாராகிய சிவயோகிகளின் செய்கையே. புத்தர், சமணர்களின் மொழிகளை எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக! இப்புறச் சமயத்தார் பன்னெறிகளில் புகாமல் காத்தருளும் திறம் நின் திருவடிக்கே உரியதாகும்.
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே. (11)
பாடல் விளக்கம்‬:
நேர்மையை அகழ்ந்து எறிவதாகிய, நெஞ்சத்தில் நிலைத்து எவரையும் துன்புறுத்தும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் அழித்தருள வல்லவனே. உலகுக்கெல்லாம் தாயாம் தன்மையை ஏற்றருளத் தக்கவன், ஒப்பில்லாத நீ ஒருவனே. நன்மை புரிந்தருளுவதில் உயர்ந்தவனே! நாங்கள் தளர்ந்த இடத்து எங்களைக் காத்தருள்வாயாக!
பாடுவோர்களையும், கேட்போர்களையும் உள்ளம் குழையச் செய்யும் விதமாக சிவபெருமானைப் போற்றி திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய,
இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்கு எந்தக் குறைவும் உண்டாகாது.

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU